கோடல் மரபே கூறும் காலை
பொழுதொடு சென்று வழிபடன் முனியான்
குணத்தொடு பழகி அவன் குறிப்பில் சார்ந்து
இரு என இருந்து, சொல் எனச் சொல்லிப்
பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்
சித்திரப் பாவையின் அத்தக அடங்கிச்
செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆக
கேட்டவை கேட்டு, அவை விடாது உளத்து அமைத்து
போவெனப் போதல் என்மனார் புலவர்
நூல்: நன்னூல்
பாடியவர்: பவணந்தி முனிவர்
சூழல்: பாடம் கேட்டலின் தன்மை, அதாவது மாணவனுக்கான குணங்களைச் சொல்லும் பாடல் இது
ஒருவன் எப்படிப் பாடம் கேட்கவேண்டும் தெரியுமா?
1. சரியான காலத்தில் செல்லவேண்டும்
2. ஆசிரியரை உரிய மரியாதையுடன் வணங்கவேண்டும்
3. அவருடைய குறிப்பை அறிந்து நடக்கவேண்டும்
4. எப்போதும் அவர் சொன்னதை மறுக்காமல் செய்யவேண்டும்
5. அவரது சொல்படி நடக்கவேண்டும்
6. பசியோடு இருப்பவனுக்குச் சாப்பாட்டின்மீது அளவுகடந்த ஆர்வம், ஆசை, வெறி வருமல்லவா? அப்படிப்பட்ட ஒரு வெறி, படிப்பவனுக்குத் தான் படிக்கும் விஷயத்தின்மீது வரவேண்டும்
7. ஓவியத்தில் உள்ள ஓர் உருவம் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசையாமல் இருப்பதுபோல், கவனம் சிதறாமல், மற்ற ஆர்வங்களையெல்லாம் அடக்கிப் படிப்பின்மீது கவனம் செலுத்தவேண்டும்
8. வாத்தியார் சொல்பவற்றைக் காதால் கேட்டு மனத்தில் பதித்துக்கொள்ளவேண்டும்
9. ஒருமுறை கேட்பதோடு நிறுத்திவிடக்கூடாது, அவை மனத்தில் நன்றாகப் பதியும்வரை திரும்பத் திரும்பக் கேட்கவேண்டும்
10. ’நீ எல்லாம் கற்றுக்கொண்டுவிட்டாய்’ என்று சொல்லி ஆசிரியரே நம்மை வாழ்த்தி வழி அனுப்பும்போதுதான் அங்கிருந்து கிளம்பவேண்டும், அதற்குள் அரைகுறை ஞானத்துடன் புறப்பட்டுவிடக்கூடாது
துக்கடா
- இந்தப் பாட்டுக்கு ஒரு நீண்ட பெருமூச்சைத்தவிர வேறென்ன ‘துக்கடா’ எழுதிவிடமுடியும்? 😉
181/365
அது சரி, ஒன்னும் சொல்ல முடியாது தான். அறிவியலிலும், ஆராச்சியிளும் இந்தியர்கள் சாதிக்காதற்கு, மாணவர்கள், கற்பவர்கள் (குருகுல கல்வி முறையில்) ஆசிரியரை எதிர்த்து கேள்வி கேட்காதததுகூட காரணம் என்று வாதிடுபவர்கள் உண்டு!
நன் மாணாக்கன் போல, நல்லாசிரியருக்கான இலக்கணம் கூட நன்னூலில் உண்டு என நினைகிறேன். இவ்வளவு தூரம் வந்த பிறகு ஆசிரியருக்கான இலக்கணத்தையும் பதிவிடுங்கள். 🙂
~குரு
எங்கள் காலத்தில்(போச்சுடா, ஆரம்பிச்சட்டாங்க), அப்படி இருந்த மாணவர்களும் , ஆசிரியர்களும் உண்டு. 😉
ஒரு ஏழை குடும்பத்தின் முதல் தலைமுறை மாணவன் பள்ளி இறுதி அல்லது கல்லூரி செல்லும் பொழுது நீங்கள் மேற்கூறிய குணங்களை இன்றும் பார்க்கலாம். சாதிக்க வேண்டும் என்ற வெறி அவனிடம் இருக்கும். அதனால் உன்னிப்பாகக் கவனித்து, காலத்தேச் சென்று, ஆசிரியர் சொல்வதைக் கேட்டு, கவனம் சிதறாமல், படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பது மட்டுமே இலக்காக வைத்திருப்பவனைப் பற்றித் தான் பவணந்தி முனிவர் சொல்லியிருக்கிறார்.
amas32
நீண்ண்ண்ண்ண்ட பெருமூச்சு! – இதை விட என்ன ஒரு பின்னூட்டம் எழுதிட முடியும்?:)
நீண்ண்ண்ண்ண்ட பெருமூச்சு! – இதை விட என்ன ஒரு பின்னூட்டம் எழுதிட முடியும்?:)
Reply
அத்தகைய மாணவர்கள் இருக்கிறார்கள். நல்ல ஆசிரியர்களுக்கு அழகு, அதையும் எழுதுங்கள்.