தண் தாமரையின் உடன் பிறந்தும்
….தண்டே நுகரா மண்டூகம்,
வண்டோ கானத்து இடை இருந்து
….வந்தே கமல மது உண்ணும்,
பண்டே பழகி இருந்தாலும்
….அறியார் புல்லோர், நல்லோரை.
கண்டே களித்து இங்கு உறவாடி
….தம்மில் கலப்பார் கற்றோரே!
நூல்: விவேக சிந்தாமணி
பாடியவர்: தெரியவில்லை
குளத்தில் தாமரையும் இருக்கிறது, தவளையும் இருக்கிறது. ஆனால், குளிர்ச்சியான அந்தத் தாமரை மலரைத் தவளை நிமிர்ந்துகூடப் பார்ப்பதில்லை, அதன் தண்டை நுகர்ந்துகூடப் பார்ப்பதில்லை.
வண்டு, எங்கேயோ காட்டின் மத்தியில் பிறந்து வாழ்கிறது. தாமரையைத் தேடி வந்து இனிய தேனை உண்கிறது.
அதுபோல, அற்பமானவர்கள் நல்லவர்களோடு நெருங்கிப் பழகினாலும், அவர்களுடைய அருமையை உணரமாட்டார்கள். அலட்சியமாகதான் இருப்பார்கள்.
அதேசமயம், கற்றவர்கள் மற்ற அறிஞர்களைத் தேடிக் கண்டுபிடித்து நட்பு கொள்வார்கள். அந்த உறவைக் கொண்டாடுவார்கள்.
340/365

அருமையான பாடல்! நல்ல கருத்து; சந்தம்; எளிமையான சொற்கள்!
இந்த மண்டூகம் எனபதைத்தான் “மண்டு” என்று இப்போது சொல்கிறோம் போலும்.
//வந்தே கமல மது உண்ணும்,// மிகவும் அருமையான ஒரு வரி!
இன்றைய சமூக வலைதளங்கள் மூலம் நிறைய நல்ல நட்புகள் உருவாகின்றன. பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளவர்களையும் இந்த வலைதளங்கள் இணைக்கின்றன. இயல், இசை, நாடகம், அறிவியல், விஞ்ஞானம், தொழிற்நுட்பத் துறை, போன்று பல துறைகளிலும் உள்ள அறிஞர்களின் நட்பும் அவர்களின் துறை சார்ந்த அற்புதமான கருத்துக்களும், விளக்கங்களும் தொலை தூரத்தில் இருப்பவருக்கும் கிட்டுகிறது. வேண்டியவர்களை விருப்பத்துடன் இணைக்கிறது இன்றைய அறிவியல் வளர்ச்சி.
பக்கத்துக்கு வீட்டில் இருப்பவருக்கோ, அவரது உறவினருக்கோ தெரியாத ஒருவரின் புலமை எங்கோ இருப்பவருக்குத் தெரிந்து அவர் இவரை நாடி பயன் பெறுகின்றார். அருகில் இருக்கும் தவளைக்குத் தெரியாத தாமரை தேனின் ருசி எங்கிருந்தோ தேடி வந்து புசிக்கும் வண்டிற்குத் தெரிகிறது.
பல சமயம் வேற்று நாட்டவர் நம் கலாச்சாரத்தின் பெருமையை போற்றும் பொழுது தான் நாம் விழித்துக் கொண்டு அதை பாராட்டத் துவங்குகிறோம்.
amas32
தவளை – வண்டு உவமையை ‘இணையத் தாமரை’யுடன், அருமையாகப் பொருத்தியிருக்கிறீர்கள். புதிய பார்வை. நன்றி
மிக்க நன்றி ஐயா
amas32
விவேகச் சிந்தாமணி பாடல் அருமை. காலத்திற்கேற்ற விளக்கம். அருமை.