குருநாதா!

அபகார நிந்தை பட்டு உழலாதே

….அறியாத வஞ்சரைக் குறியாதே

உபதேச மந்திரப் பொருளாலே

….உனை நான் நினைத்து அருள் பெறுவேனோ!

இபமாமுகன் தனக்கு இளையோனே,

….இமவான் மடந்தை உத்தமி பாலா,

ஜெபமாலை தந்த சற்குருநாதா,

….திரு ஆவினன்குடிப் பெருமாளே!

நூல்: திருப்புகழ்

பாடியவர்: அருணகிரிநாதர்

முருகா,

யானை முகம் கொண்ட விநாயகரின் தம்பியே, இமவான் என்கிற மலை அரசனின் மகளாகிய உத்தமி பார்வதியின் மகனே, எனக்கு ஜெபமாலையை வழங்கி அருள் செய்த குருவே, திரு ஆவினன் குடியில் வாழும் பெருமாளே,

நான் யாருக்கும் தீமைகளைச் செய்யக்கூடாது, அதனால் ஏற்படுகின்ற பழிக்கு ஆளாகக்கூடாது, வஞ்சர்களோடு சேர்ந்து பழகாமல் இருக்கவேண்டும், நீ எனக்கு உபதேசம் செய்த அந்த மந்திரப் பொருளையே எப்போதும் தியானம் செய்யவேண்டும், எந்நேரமும் உன்னையே நினைத்து உன் அருளைப் பெறவேண்டும். இந்த ஆசை நிறைவேறுமா?

துக்கடா

  • திரு ஆவினன்குடி என்பது பழனி மலையின் அடிவாரத்தில் உள்ள ஆலயம், இங்கேதான் அருணகிரிநாதருக்கு முருகன் ஒரு ஜெபமாலையைத் தந்து அருளியதாக நம்பப்படுகிறது

234/365

Posted in அருணகிரிநாதர், திருப்புகழ், பக்தி, முருகன் | 1 Comment

பாட்டுப் பாடத் தெரியுமா?

கடந்து அடு தானை மூவிரும் கூடி

உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே.

முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு,

முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்,

யாமும் பாரியும் உளமே,

குன்றும் உண்டு, நீர் பாடினிர் செலினே.

நூல்: புறநானூறு (#110)

பாடியவர்: கபிலர்

சூழல்: நொச்சித் திணை, மீதி விவரம் ‘முன்கதை’யில் காண்க

முன்கதை

பறம்பு மலை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அரசன் பாரி. அவனுடைய நண்பர், புலவர் கபிலர்.

சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களுக்கும் பாரிமீது கோபம். அவனை எதிர்த்துப் படையெடுத்து வந்தார்கள்.

ஆனால், பல நாள் முற்றுகைக்குப்பிறகும், அவர்களால் பாரியை வெல்லமுடியவில்லை. கடுப்பாகி உட்கார்ந்திருந்தார்கள்.

அப்போது, கபிலர் அவர்களைப் பார்க்கச் சென்றார். இந்தப் பாடலைப் பாடினார்.

உரை

மூவேந்தர்களே,

நீங்கள் நிஜமான வீரர்கள்தான். உங்களை எதிர்த்து நிற்கும் பகைவர்களை நீங்கள் வஞ்சகம் செய்து தோற்கடிப்பதில்லை. உண்மையிலேயே பெரும் படை திரட்டி வீரத்துடன் போரிட்டுதான் வெல்கிறீர்கள்.

ஆனால், எங்கள் பாரியைமட்டும் நீங்கள் அப்படிச் சுலபமாக ஜெயித்துவிடமுடியாது. குளிர்ச்சி நிறைந்த இந்தப் பறம்பு மலையைக் கைப்பற்றிவிடமுடியாது.

அப்படி உங்களுக்குப் பாரியை ஜெயிக்கிற ஆசை இருந்தால், நான் ஒரு பிரமாதமான யோசனை சொல்கிறேன், கேளுங்கள்.

பாரிக்குச் சொந்தமான இந்த நல்ல நாட்டில் மொத்தம் முன்னூறு ஊர்கள் இருந்தன. அத்தனையையும் அவன் தன்னைப் புகழ்ந்து பாடிய புலவர்கள், பாணர்களுக்குத் தானமாகக் கொடுத்துவிட்டான். இப்போது மிச்சமிருப்பது, நான், பாரி, இந்தப் பறம்பு மலை, மூன்றும்தான்.

ஆகவே, நீங்களும் பாரி முன்னால் வந்து அவனைப் பாராட்டிப் பாடுங்கள். அவனாகப் பார்த்து ஏதாவது ’போட்டுக் கொடு’ப்பான் ;)

துக்கடா

  • படை பலம் நிறைந்த மூவேந்தர்களுக்கு முன்னால் அவர்களையே கிண்டலடித்து இப்படி நக்கலாக ஒரு பாட்டுப் பாட இந்தப் புலவருக்கு எத்தனை தைரியம் இருக்கவேண்டும்? தமிழ் தந்த வீரம்தான்போல!
  • மூவேந்தர்களுக்கும் பாரிமீது அப்படி என்ன கோபம்? அவர்களுக்குப் பாரியின் மகளைத் திருமணம் செய்துகொள்ள ஆசை, இவன் மறுத்துவிட்டான், அதான் சண்டை போட வந்துவிட்டார்கள்
  • அப்புறம் என்னாச்சு? அது பெரிய சோகக்கதை. இன்னொரு நாள் பேசுவோம்

233/365

Posted in கதை கேளு கதை கேளு, கபிலர், கிண்டல், புறநானூறு, புறம், வீரம் | 14 Comments

க(வி)சடதபற

துடித்துத் தடித்துத் துடுப்பு எடுத்த கோடல்

தொடுத்த தொடை கடுக்கை பொன்போல் பொடித்துத்

தொடை படைத்த தோள் துடித்த தோகை கூத்தாடக்

கடி படைத்துக் காட்டித்துக் காடு

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்

காந்தள் மலர்கள் ஒளி பொருந்திய அரும்புகளை முளைக்கவிட்டன.

கொன்றை மலர்கள் பொன் போல் ஒளிர்கின்ற மாலைகளைத் தொங்கவிட்டன.

தோகை மயில்கள் கூத்தாடத் தொடங்கின.

வளையல் அணிந்த பெண்களின் தோள்கள் சிலிர்த்துத் துடித்தன.

இப்படியாக, தனக்கென்று ஒரு தனி மணத்துடன் புதுக் காட்சி ஒன்றைக் காண்பிக்கத் தொடங்கியது காடு.

துக்கடா

  • காளமேகத்தின் மற்ற பாடல்களோடு ஒப்பிடும்போது இந்தப் பாட்டும் கருத்தும் கொஞ்சம் சாதாரணமாகத் தோன்றுகிறது அல்லவா? அதற்குக் காரணம் உண்டு, இது கருத்துக்காக எழுதிய பாட்டு அல்ல, சவாலுக்காக எழுதியது!
  • இந்தப் பாடல் முழுமையும் வல்லின எழுத்துகளைமட்டுமே கொண்டு (கசடதபற + அவற்றின்ன் குடும்பம்) எழுதப்பட்டது. இப்படி:
  • துடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோடற்
  • றொடுத்த தொடைகடுக்கை பொற்போற் பொடித்துத்
  • தொடைபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்
  • கடிபடைத்துக் காட்டித்துக் காடு

232/365

Posted in காளமேகம், தனிப்பாடல், வர்ணனை, வார்த்தை விளையாட்டு, வெண்பா | 11 Comments

கற்பித்தானா?

கல்லைத்தான் மண்ணைத்தான்

….காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?

இல்லைத்தான் பொன்னைத்தான்

….எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா?

அல்லைத்தான் சொல்லித்தான்

….ஆரைத்தான் நோவத்தான் அச்சோ எங்கும்

பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்

….புவியில்தான் பண்ணினானே!

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: இராமச்சந்திரக் கவிராயர்

சூழல்: வறுமையில் வாடும் ஒரு புலவர். தன்னுடைய நிலைமையை எண்ணி வருந்திப் பாடுகிறார்

தாமரைப் பூவில் வாசம் செய்யும் பிரம்மா, என்னைப் படைத்தபோதே கையில் கொஞ்சம் தங்கத்தைக் கொடுத்துக் காப்பாற்றியிருக்கவேண்டும், இல்லாவிட்டால், கல்லையும் மண்ணையும் காய்ச்சிக் குடிக்கச் சொல்லித்தந்திருக்கவேண்டும்.

அந்தக் கடவுள் இந்த இரண்டையும் செய்யாததால் நான் படுகின்ற துன்பத்தை எங்கே சொல்லி நோவது? இப்படி எல்லாரிடமும் பல்லைக் காண்பித்துப் பிழைக்கும் வாழ்க்கையாகிவிட்டதே!

துக்கடா

  • உரையைவிடப் பாட்டுதான் நன்றாகக் களை கட்டுகிறது. இல்லையா? :)
  • அதனால்தான், ’பராசக்தி’ என்ற திரைப்படத்தில் இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகள் அழகான வசனமாகப் பயன்படுத்தப்பட்டன. மீதிப் பாட்டையும் சேர்த்துப் படித்தால் அந்தக் காலக் கவிஞர்கள் அனுபவித்த வேதனை முழுசாகப் புரியும்

231/365

Posted in சினிமா, தனிப்பாடல், வறுமை | 6 Comments

அமுதம்!

அன்னவளை அல்லள் என, ஆம் என அயிர்ப்பான்,

கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல்வண்ணன்

உன் உயிர் நிலைப்பது ஒர் அருத்தியொடு உழைத்து ஆண்டு

இன் அமிர்து எழக் களிகொள் இந்திரனை ஒத்தான்

*

‘நறத்து உறை முதிர்ச்சி உறு நல் அமிழ்து பில்கு உற்று

அறத்தின் விளை ஒத்து முகடு உந்தி அருகு உய்க்கும்

நிறத்துவர் இதழ்க் குயில் நினைப்பிடை அல்லால்

புறத்தும் உளதோ?’ என மனத்தொடு புகன்றான்

நூல்: கம்ப ராமாயணம் (பாலகாண்டம், கோலம் காண் படலம்)

பாடியவர்: கம்பர்

சூழல்: ஜனகனின் சபையில் எல்லார் முன்பாகவும் தோன்றுகிறாள் சீதை. அப்போது ராமன் மனத்தில் ஏற்படும் எண்ணங்கள்

’இந்த ஜனகனின் மகள், முன்பு கன்னி மாடத்தில் நான் பார்த்த பெண்தானா?’ என்று ராமனுக்குச் சந்தேகம்.

’அவளாகதான் இருக்கும்’ என்று ஒரு மனம் சொல்கிறது, ‘ம்ஹூம், இருக்காது’ என்று இன்னொரு மனம் மறுக்கிறது. ஒரே குழப்பம்.

இப்போது, சீதை வருகிறாள். அவள் முகத்தைக் கண்டதும் ராமனுக்கு மகிழ்ச்சி. ‘அவளேதான் இவள்’ என்று உறுதிப்படுத்திக்கொண்டுவிட்டான். அந்த ஆனந்தத்தில் திளைத்தான்.

முன்பு ஒரு காலத்தில், தேவர்களும் அசுரர்களும் கஷ்டப்பட்டுப் பாற்கடலைக் கடைந்தார்கள். அந்த உழைப்பின் பலனாக, அவர்களுடைய உயிரை என்றும் உடலில் நிலைத்து நிற்கச் செய்யும் அமுதம் தோன்றியது. அதைக் கண்டு இந்திரனும் மற்றவர்களும் மகிழ்ந்தார்கள்.

இப்போது சீதை என்கிற கன்னி அமுதத்தைக் கண்டு ராமன் அடைந்த மகிழ்ச்சியும் அதேமாதிரியானதுதான்.

*

அப்போது, ராமன் தன் மனத்துக்குள் இப்படிச் சொல்லிக்கொண்டான்:

’சிவந்த இதழ்களைக் கொண்ட இந்தக் குயிலை அன்றைக்கு நான் கன்னிமாடத்தில் பார்த்தேன். தேனில் ஊறிய இனிப்புபோல், நல்ல அறச் செயல்களைச் செய்வதனால் கிடைக்கும் பலன்களைப்போல் இனிமையானவளாக இவள் எனக்குத் தோன்றினாள்.’

‘அந்தக் கணமே, அவள் என்னுடைய நெஞ்சுக்குள் புகுந்துவிட்டாள். இப்போதும் அங்கேதான் நிரந்தரமாகக் குடியிருக்கிறாள்.’

‘ஆச்சர்யமான விஷயம், என் மனத்துக்குள்மட்டும் வாழ்கிறாள் என்று நான் நினைத்துக்கொண்டிருந்த அந்தப் பெண், இங்கே வெளியே உயிரோடு வந்து நிற்கிறாளே. ஆச்சர்யம்தான்!’

230/365

Posted in கதை கேளு கதை கேளு, கம்ப ராமாயணம், கம்பர், காதல், நாடகம், ராமன் | 20 Comments

பவனி

இடியின் முழக்கொடு படரும் முகிலென

….யானைமேல் கனபேரி முழக்கமும்

துடியின் முழக்கமும் பரந்து திசைக் கரி

….துதிக்கையால் செவி புதைக்கவே,

அடியர் முழக்கிய திருப்பல்லாண்டு இசை

….அடைத்த செவிகளும் திறக்க, மூவர்கள்

வடிசெய் தமிழ்த் திருமுறைகள் ஒருபுறம்,

….மறைகள் ஒருபுறம் வழங்கவே,

பவனிவந்தனரே,

மழவிடைப் பவனி வந்தனரே!

நூல்: திருக் குற்றாலக் குறவஞ்சி

பாடியவர்: திரிகூடராசப்பக் கவிராயர்

சூழல்: திரிகூடநாதர் (சிவபெருமான்) வீதியில் பவனி வருகிறார்

முதலில், யானைகள் நடந்துவருகின்றன. அவற்றின்மேல் பெரிய முரசுகளை வைத்து அடிக்கிறார்கள். பலத்த சத்தம் எழுகிறது. அதைப் பார்க்கும்போது, மேகங்களுக்கு நடுவே ஒலிக்கும் இடி ஓசையைப்போல் இருக்கிறது.

முரசு ஒலியும், கூடவே உடுக்கையின் ஒலியும் சேர்ந்து பலமாக ஒலிப்பதால் எங்கும் சத்தம் அதிர்கிறது. எட்டுத் திசைகளையும் காவல் காக்கும் யானைகள் இந்த ஓசையைக் கேட்டுப் பயந்துபோகின்றன. தும்பிக்கையால் தங்களுடைய காதைப் பொத்திக்கொள்கின்றன.

அதன்பிறகு, பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் சிவபெருமானைப் போற்றிப் பாடும் ‘திருப்பல்லாண்டு’ இசை இனிமையாக ஒலிக்கிறது. மூடிய காதுகள் திறக்கின்றன.

அடுத்து, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூன்று நாயன்மார்களும் பாடிய தமிழ்மறையாகிய தேவாரப் பாடல்கள் பாடப்படுகின்றன, வேதங்களும் பாடப்படுகின்றன, இத்தனையையும் கேட்டுக்கொண்டு காளையின்மீது பவனி வருகிறார் திரிகூடநாதர்.

துக்கடா

  • இன்றைய ‘சிவராத்திரி’ சிறப்புப் பாடல் இது!
  • திருக்குற்றாலக் குறவஞ்சியில் வருகிற அருமையான பத்து பவனிப் பாடல்களில் ஒன்றைமட்டும்தான் இங்கே தந்திருக்கிறேன். மிச்சத்தைத் தேடிப் படியுங்கள், நேராக ஒரு கோயில் ஊர்வலத்தில் நின்றதுபோல் பிரமை ஏற்படுவது நிச்சயம்!
  • ‘அஷ்டதிக்கஜங்கள்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அஷ்டம் (எட்டு) + திக்கு (திசை) + கஜங்கள் (யானைகள்) = எட்டு திசைகளையும் காவல் காக்கும் அந்த யானைகள்தான் இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை ராவணன் என்ன செய்தான் தெரியுமோ? தேடுங்கள் ;)
  • யானைகளுக்கு மேகங்கள் உவமை, அந்த யானைகளுக்குமேலே ஒலிக்கும் முரசுச் சத்தத்துக்கு அந்த மேகங்களுக்கு இடையே ஒலிக்கும் இடிச் சத்தம் உவமை. மிகப் பொருத்தமானது!

229/365

Posted in சிவன், திருக்குற்றாலக் குறவஞ்சி, பக்தி, பண்டிகை | 2 Comments

அலை எப்போது அடங்கும்?

பெரும் கால் ஆடிய சென்றார் ஒருங்கு உடன்

ஓசை அவிந்தபின் ஆடுதும் என்று அற்றால்

இல் செய் குறைவினை நீக்கி அறவினை

மற்று அறிவாம் என்று இருப்பார் மாண்பு

நூல்: நாலடியார் (#332)

பாடியவர்: சமண முனிவர்கள்

சிலர் தான தர்மங்களே செய்யமாட்டார்கள். கேட்டால் ‘முதலில் என்னுடைய வீட்டுக் கடமைகளையெல்லாம் குறைவில்லாமல் முழுமையாகச் செய்து முடித்துவிடுகிறேன், அதன்பிறகுதான் மற்றவர்களுக்கு உதவி செய்ய நேரம் ஒதுக்கமுடியும்’ என்பார்கள்.

கடலுக்குக் குளிக்கச் செல்கிற ஒருவன் ‘அலை அதிகமாக உள்ளது, இந்த அலைகளெல்லாம் அடங்கியபின் குளித்துக்கொள்ளலாம்’ என்று கையைக் கட்டிக்கொண்டு காத்திருந்தால் அது எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம்? அதுபோன்ற மடத்தனம்தான் இதுவும்!

அலைகளுக்கு நடுவே சமாளித்துக் குளிப்பதுபோல், இல்லறக் கடமைகளைக் கவனித்தபடி தன்னால் இயன்ற நன்கொடைகளை அளிப்பது, பொதுநலத்துக்காகப் பாடுபடுவதுதான் நல்லது.

துக்கடா

  • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
  • பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
  • ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றன்றால்
  • இற்செய் குறைவினை நீக்கி அறவினை
  • மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு

228/365

Posted in அறிவுரை, ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், கொடை, நாலடியார், வெண்பா | 2 Comments